Tuesday, November 24, 2009

எலுமிச்சம் பழமும்,எதிர்த்த வீடும்...

'ஸ்கைப்'ஐ க்ளிக் செய்து 'வீடியோ கால்' போட்டு ஹெட் ஃபோன் பொருத்திக்
கொண்டான், ராகவன்.
ஸ்க்ரீனில் வந்தான் சரவணன்.
'சரவணா எப்படி இருக்கே?'
'ஃபைன்.. நீ எப்படி இருக்கே?'
'சூப்பர் ஃபைன்.."
' ஊருக்கு போனியா.. ஊரிலே என்ன விசேஷம்?'
' கோபி சி.ஏ. முடிச்சுட்டான்..'
'குட்..அப்புறம்..'
' நம்ம சீனுவுக்கு ஒரு 'கோர்' கம்பெனியில ஆஃபர் வந்திருக்கு. அடுத்த மாதம்
ஹைதராபாத் கிளம்பறான். பாபு தான், வெட்டியா ஊர் சுத்தறான். நாம மூணு பேரும்
உட்கார்ந்திருந்த அந்த பாலக்கட்டையில, இப்ப அவன் மட்டும் தனியா..தாடி வளர்த்துண்டு
ஊருக்கு கிளம்பும்போது பார்த்தேன். பாவமா இருந்தது. ஏதாவது பேசலாம்னா
அதுக்குள்ளே பஸ் வந்துடுச்சு..'
' ஐயோ பாவம்டா..அவன்! நம்ம மூணு பேர்ல நல்லா படிக்கிறவன் அவன் ஒருத்தன் தான்!'
' என்ன பண்றது..சுழின்னு ஒண்ணு இருக்கே..'
' நம்மூர்ல, விலைவாசியல்லாம் எப்படி?'
' அதை ஏன் கேட்கறே..விட்டா, துவரம் பருப்பை தூக்கி சாப்பிடும் போல் இருக்கு தங்கம்!
என்னடா உளர்றே?'
'இங்க..எலுமிச்சம் பழம் கெட்ட கேடு...ஒண்ணு அஞ்சு ரூபா..'
' ஒரு பழம் அஞ்சு ரூபாயா? இங்க கூட ஒரு டாலர் தாண்டா..'
' அது மட்டுமா.. காய்கறிகளெல்லாம் யானை விலை..குதிரை விலை. இது எல்லாத்தையும்
விட டிஜிடல் கேமரா வாங்கி....
' .டிஜிடல் கேமராவை வச்சுண்டு என்ன பண்றது?'
' டிஜிடல் கேமராவை வச்சு என்ன பண்றதா? எல்லா காய்கறிகளையும் ஃபோட்டோ
பிடிக்க வேண்டியது. அப்புறம் எல்லாத்தையும் பிரேம் பண்ணி ஹால்ல மாட்டி, அதைப்
பார்த்துக் கொண்டு வெறும் சாதம் சாப்பிடவேண்டியது தான்.. எஸ்.வி.சேகர் கூட ஒரு படத்தில பண்ணுவாரே... '
'சூப்பர் ஐடியாடா.. '
அது சரி..உன்னோட வேலை எப்படி இருக்கு?'
'ரொம்ப போர்டா, சரவணா..ஒவ்வொரு நா வீட்டுக்கு வர நைட் ஒன்பது,ஒன்பதரை
ஆகிறது. மீஞ்சூர் தாண்டி இருபது கிலோ மீட்டர் தள்ளி 'ப்ராஜக்ட்' . சாப்பாடு வேற சரியில்லை..சமைக்கவும் தெரியாது,எனக்கு.தம்பி ஊர்லேந்து, லீவுக்கு வரட்டுமான்னு
கேட்டான். வராதேன்னுட்டேன். நானே இங்கு சாப்பாட்டுக்கு கஷ்டப் பட்டுக்கிட்டு இருக்கேன். இவன் வேற வந்து கஷ்டப் படணுமா?'
'ச்சீ..அப்படி 'டைரக்டா' சொல்லக் கூடாதுடா..தப்பா எடுத்துக்கப் போறான்..'
'இதிலென்னடா தப்பு..நான் யதார்த்தத்தைச் சொன்னேன்! 'பப்ளிக் செக்டார்'னு
வந்து சேர்ந்தேன் பாரு..என்ன செருப்பால அடிக்கணும்.'ப்ரைவேட்' மாதிரி புழியறான்..
பாக்கி பசங்க எல்லாம் ஜாலியாத்தான் இருக்காங்க.என்ன மாதிரி 'சிவில் எஞ்சீனீர்' தான்
'எம் புக்','சைட்'டுன்னு லோல் படறான்.. இதுக்கா ஐ.ஐ.டியில 'சிவில்' படிச்சோம் ?
ஒவ்வொரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தா.. வேலையை விட்டுடலாமான்னு தோணுது..'
'மடையா..அப்படி எதுவும் செஞ்சுடாதே..வேலை கிடைக்கிறதே குதிரைக் கொம்பா
இருக்கு இப்ப. நீயும் நம்ம பாபு மாதிரி, தாடி வச்சுண்டு பாலக்கட்டையில் போய்த்
தான் உட்காரணும்..பார்த்துக்கோ.. எனக்கே இங்க பயமாயிருக்கு. எதோ படிப்புன்னு
காலத்த ஓட்டிக்கிட்டு இருக்கேன். இங்க இருக்கிற 'ரிசஷன்'ல, படிச்சு முடிச்சதுக்கு அப்புறம்
என் கதி என்ன ஆகுமோ?... நினச்சாலே வயிற்றைக் கலக்குது!'
ஒரு நிமிடம் மௌனம்.
அதை உடைத்தான், ராகவன்.
' சரி...அமெரிக்காவுல என்னடா விசேஷம், சரவணா ?'
' ப்ச.. ஒண்ணுமில்ல... ம்....சொல்ல மறந்துட்டேனே..நேற்று நம்ம அப்துல் கலாம் இங்க
நியூ ஆர்லியன்சுக்கு 'கெஸ்ட் லெக்சர்' கொடுக்க வந்திருந்தார்..'
' வெரி குட். நீ போனியா?'
'இங்கிருந்து அறுநூறு கிலோ மீட்டர்டா..முன்னாடியே தெரிஞ்சாலும் போய் பார்த்திருக்கலாம். நம்ம 'இண்டியன் ஸ்டூடண்ட்ஸ் அஸோசியேஷன்' 'வார்ம் ரிஷப்ஷன்'
கொடுத்திருக்காங்க..சரி..அடுத்த தடவை வரும்போது பார்த்துக்கலாம்'
'சரி..குட் நைட் டா..'
'குட் மார்னிங்க்."
'ஓ..'
'சிஸ்டத்'தை அணத்து விட்டு, கீழே வந்தான். மனசுக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
நேற்றைக்கு அமெரிக்காவில் நடந்த விஷயம் இன்று நமக்கு தெரிகிறது!
அதை விட ஆச்சர்யம்!
எதிர்த்த வீட்டில் பளிச்சென்று லைட்!
'யார் ?'
ஆவலுடன் வாசலுக்கு வந்தான்.
ஏனென்றால், கடந்த ஆறு மாதமாக பூட்டிக் கிடந்த வீடு அது!
எதேச்சையாக எதிர் வீட்டுக் காரரும் வந்தார், கேட்டை பூட்ட..
சிரிப்பு ஒன்று சிரித்து வைத்தான்.
அவரும் சிரித்தார்.
' சார்..புதுசா குடி வந்திருக்கீங்களா?'
' ஆமாம் சார்..'
பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள்
' சார் இங்க குடி வந்து ஒரு வாரம் இருக்குமா?'
' இல்ல சார்.. இன்னியோட ஒரு மாசம் ஆச்சு..'
பக்கென்றது ராகவனுக்கு !