Saturday, October 30, 2010

வறுமையும், எருமையும்...


எருமையைக் கூட,
விரட்ட மனம்
இல்லாதவர்கள்,
எல்லாரும்,
கூட்டமாய் சேர்ந்து,
கூச்சல் போட்டார்கள்,
'வறுமையை
விரட்டுவோம்'

*
தாரை, தப்பட்டை ஒலிகள்..
காதை கிழிய வைக்கும்,
சீழ்க்கை....
படீரென்று சத்தம்
போடும் பட்டாசுகள்!
உள்ளே ஊற்றப் பட்ட
'குவார்ட்டரால்'
வெளியே
தள்ளாடியபடி...
குடி மகன்கள்....
பாடையிலிருந்து
விருட்டென்று,
எழுந்து,
எரிச்சல் தாங்க முடியாமல்
பிணம் ஒன்று
சொன்னது:
' தா, சும்மா கிட! '
*
வீட்டை விட்டு,
விரட்டப் பட்ட,
பெற்றோர்களுக்கு,
முதியோர் விடுதியில்
பரிசாரகனாக
வேலை பார்க்கும்,
மகன்
உணவு
பரிமாறினான்,
பரிவோடு!
*

Wednesday, October 27, 2010

மாற்றி யோசி....

" செய்யும் தொழிலே தெய்வம்"
யாருக்கு?
பூசாரிகளுக்கு !
அர்ச்சகர்களுக்கு !!
பட்டர்களுக்கு....!!!
*
அண்ணலும் 'நோ..கீ' னான்...
அவளும் ' நோ.. கீ'னாள்...
கடைசியில்,
காம்பவுண்ட் சுவர்,
பால் பாக்கெட்
பையில்,
வீட்டு சாவி!!!
*
ஓசிப் பேப்பர்
படிக்க வரும்,
நபர் போல்,
நாள் தவறாமல்,
வந்து விட்டுப்
போகிறது,
மின்வெட்டும்!!!
*

Friday, October 22, 2010

கலிஃபோர்னியா உறவுகள்!!

கலிஃபோர்னியாவில்
மகன் வயிற்றுப் பேத்தி
கனடாவில்
மகள் வயிற்றுப் பேரன்..
வேர்களோ
இங்கு..
விழுப்புரத்தில்!!
உறவுகளைப் பற்றிக்
கொள்ள 'ஸ்கைஃப்'
தான்
தொப்புள் கொடி!!
நினைத்துப் பார்க்கிறன்..
இப்படிப் பட்ட உத்யோகம் !
அது கொடுத்த மனைவி..
மக்கள்..உறவு....
ஒன்றும் வேண்டாம்..
ஒரு அத்துவானப்
பட்டிக் காட்டில்,
மூணாம் க்ளாஸ்
வாத்யார் வேலை!
அங்கு அஞ்சாம் க்ளாஸ்
வாத்யார் வேலை
காலி இருந்தாலும்
அது கூடாது!
மூணாம் க்ளாஸ்னா
மூணாம் க்ளாஸ் தான்!
அந்த வேலை கொடுக்கும்,
எளிமையான
வாழ்க்கைத் துணை!
அதனால் வரும்
மக்கட் செல்வம்..
அதுகளும்
பக்கத்து..பக்கத்து...
குடில்களில்..
' தாத்தாவ்..பணியாரம் இந்தா
அம்மா கொடுக்க
சொல்லிச்சு..'
பச்சிளம் தளிர்கள்
வேர்களின்
அதி பக்கத்திலேயே
அதீத பாசத்துடன்..
கரெண்ட் கட் என்றால்,
கட் ஆகி விடும்,
அந்த கலிஃபோர்னியா
உறவுகள்!!
நினைத்துப் பார்க்கிறேன்..
எளிமையாய் வாழ்வது
ஒரு சுகம்..
சுகமல்ல..அது ஒரு தவம்..
தவமுமல்ல..
அது ஒரு வரம்...
இறைவனாய்ப் பார்த்து,
ஒரு சில
புண்ணியாத்மாக்களுக்கு,
கொடுத்த வரம்!!!!!!!!

Thursday, October 21, 2010

அழகு!!!!


அடி வயிறு குழிந்து,
டொக்கு விழுந்த
கன்னத்துடன்,
கவித்வம் மிக்க
குறு நில விவசாயி,
ஒருவன்
குறுஞ்சிரிப்புடன்,
குடும்பத்துடன்,
பாடினான்:
' மாடு கட்டிப்
போரடித்தால்,
மீளாது செந்நெல்
என்று,
ஆடு கட்டிப்
போரடிக்கும்,
அழகான,
தமிழகமே!!!!!!!'

Friday, October 15, 2010

வீடு கட்டியாச்சு!!

" என்ன மிஸ்டர் கோபால், வீடு கட்டிகிட்டு இருக்கீங்களாமே.."
" ஹி..ஹி..யார் சொன்னது?"
" யார் சொன்னா என்ன? நீங்க சொல்லலை.."
குற்றம் சாட்டும் தொனியில் சொன்னார், வந்தவர்.
" அது வந்து..சார்.." அசடு வழிய சமாளித்தான், கோபால்.
" எவ்வளவு ஆச்சு?"
" அறுபது, எழுபதாவது ஆகும்னு நினைக்கிறேன்..."
" அடேங்கப்பா...பணத்துக்கு என்ன பண்ணினீங்க.. லோன் போட்டிருப்பீங்க...எல்.ஐ.சி.யா..?"
அவன் சொல்வதற்குள் அவரே முந்திக் கொண்டார்.
" எதுவா இருந்தா என்ன..பாதி சம்பளம் 'லோனு'க்கே பிடிச்சுடுவாங்க..அப்படித்தானே..!
காலம் தள்ளறது கயத்தில நடக்கிற சர்க்கஸ் காரன் மாதிரி இருக்கும்.."
அவனைப் பேசவே விடவில்லை.
" அதுக்கென்ன பண்றது? கூழுக்கும் ஆசை..மீசைக்கும் ஆசைன்னா முடியுமா? அது சரி..யாராவது தெரிஞ்ச 'காண்ட்ராக்டு' காரங்க இருக்காங்களா?"
" இரும்பே டன் பன்னிரெண்டாயிரம் ரூபாய் விக்குதே! கொத்தனார் கூலி...அது..இதுன்னு ஏகத்துக்கு இழுக்குமே..."
" கஷ்டம் தான்"
" கஷ்டமா...கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல..
நம்ம இஷ்டத்துக்கு யாரும் வேலை செய்ய மாட்டாங்க..நாம ஒண்ணு சொன்னா..அவங்க ஒண்ணு செய்வாங்க..ஒரே நாளில மூணு..நாலு இடத்துல ஒத்துப்பாங்க...சொல்லவும் முடியாது..சொல்லாம இருக்கவும் முடியாது..எல்லாத்துக்கும நாம நேரடியா 'சூபர்வைஸ்' பண்ணனும்..ஆளில்லாட்டி..ஆஃபீஸ்க்கு லீவ் போடணும்..லீவுக்கு லீவும் வேஸ்ட்..அது சரி..எங்கே தான் கட்டியிருக்கீங்க..? "
' மனசுல தான் '
சொல்லிவிட்டு வெகு சந்தோஷமாக துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு ஹாய்யாக
நடந்தான், அந்த கோபால்.!!!

Tuesday, October 12, 2010

ஹல்லோ...ஹல்லோ...

"ஹல்லோ...யார் பேசறது?"
" நா தானுங்க சம்முகம்..அதாவது எளுத்தாளர் ஏகாம்பரத்தோட விசிறிங்க.. ஐயா
இருக்காருங்களா?"
" அவர் பத்திரிகை ஆஃபீசில வேலை செய்யலேப்பா..பொழுது போக்குக்காக எழுதறவரு..என்ன விஷயம்?"
" ஒண்ணுமில்லீங்க..அவரு உங்க பத்திரிகை ஆஃபீசுக்கு வருவாங்களா?"
" வருவாரு "
" ஒண்ணுமில்லீங்கய்யா..அவரு ..அவரு எளுதின ' ஒரு கனகாம்பரம் கண் சிமிட்டுகிறது' ங்கற கதையில, கதாநாயகன் மகேசை அநியாயமா சாகடிச்சுட்டாருங்க..இந்த மாதிரி சாவடிக்கற கதையெல்லாம் அவரை எளுத வேண்டாம்னு சொல்லணும்ங்க. அதுக்குத் தாங்க ஃபோன் பண்ணினேனுங்க.."
" தம்பி, உங்க பேரு என்ன?"
" சம்முகம்"
" யோவ் சம்முகம், அந்த கதையில மகேசு சாகாட்டி கதை செத்துடும்யா..அது சரி..அவரு கதைங்கள்ளாம் உனக்கு பிடிக்குமா?"
" புடிக்குமாவது? உசுருங்க..சொல்லப் போனா, ஐயா கோச்சுக்காட்டி ஒண்ணு சொல்லட்டுங்களா ?"
" சும்மா சொல்லு, சம்முகம் "
" நான் உங்க பத்திரிகையை காசு கொடுத்து வாங்கறதே, நம்ம ஐயாவோட கதைங்களுக்காகத்தான்.."
" அப்படியா?"
" ஆமாமுங்க...'ராணி முத்துல சொல்லுவாங்களே, புத்தகத்தை விரிச்சா, படிச்சு முடிக்காம கீளே வைக்கறதில்லேன்னு..' அந்த மாதிரி டைப்புங்க..ஐயாவோட கதையெல்லாம்.."
" ஓஹோ!"
" ஐயா, ஒரு சின்ன விண்ணப்பமுங்க.."
" சொல்லு, சம்முகம்?"
" ஐயாவோட அட்ரசை சொல்லுங்கய்யா, நானே நேர போய் பார்த்துக்கறேன்.."
" அட்ரஸ்ல்லாம் சொல்லக் கூடாதுய்யா.. அவுரு இன்னிக்கு, நாளைக்கு வருவாரு..அப்ப சம்முகம்ங்கற உங்க ரசிகர் ஃபோன் பண்ணினாருன்னு சொல்றேன்"
" சந்தைபேட்டை சம்முகம் ஃபோன் பண்ணினாருன்னு சொல்லுங்கய்யா.."
"ஆகட்டும், சொல்றேன், சம்முகம்"
ஃபோன் டக்கென்று வைக்கப் பட்டது.
ஒரு பெரிய 'பில்ட் அப்' செய்த திருப்தியில், அந்த பப்ளிக் ஃபோன் பூத்திலிருந்து, வெளியே வந்தார், சம்முகம் என்கிற ஏகாம்பரம்.
ஆனால்...
பாவம், அவருக்குத் தெரியாது, இத்தனை நேரம் அவருடன் அரட்டை அடித்தது எடிட்டரின் ப்யூன் என்று!!!

Saturday, October 2, 2010

பாலகிருஷ்ணன் வீடு..

அது ஒரு ஸ்டோர். முன்னும்,பின்னுமாய் ஆறு குடியிருப்புகள். காமன் லெட்ரின். பொதுவாக ஒரு கிணறு. அந்த காலத்தில், திருச்சியில் ஸ்டோர் குடியிருப்புகள் பிரசித்தம். சனி,ஞாயிறு சாயங்கால நேரங்களில், பொழுது போகாமல், பாச்சா என்கிற பார்த்தசாரதியும், கோண்டு என்கிற கோதண்டராமனும் விளையாட்டாக ஆரம்பித்த 'வாலி பால் ப்ளே'
இன்று களை கட்டி,நெட்..ஸ்பேர் பந்து..ஷார்ட்ஸ்..என்று பத்து, பதினைந்து மெம்பர்களாக வளர்ந்து விட்டது.
ஒரு ஞாயிற்றுக் கிழமை, வாலி பால் விளையாடும் போது ஆரம்பித்தான், ரகு.
' ஏன் சார், பாலகிருஷ்ணன் வீடு ஒரு மாசமாப் பூட்டிக் கிடக்கே..யாராவது வராங்களா?'
பாலகிருஷ்ணன் அந்த வாலிபால் டீமில் ஒரு ஆக்டிவ் மெம்பர். 'சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா'வில் க்ளார்க். திடீரென்று ஆஃபீஸர் ப்ரமோஷன் கொடுத்து, பம்பாய்க்கு அவனை ட்ரான்ஸ்பர் பண்ணி விட்டார்கள். பையன் ஸ்கூல் ஃபைனல் முடித்து விட, ஆர்டர் வந்த மூன்றாம் நாளே கிளம்பி விட்டான், பாலு.
' வெஜிடேரியன் வந்தா பரவாயில்ல..'
' வெஜ்ஜோ..நான்வெஜ்ஜோ.. அதுவா முக்கியம்? செட்டியாருக்கு டோக்,டோக்கா மாசம் ஐநூறு ரூபாய் வாடகை வந்தால் போறும். யாரு கொடுத்தா என்ன?'
' இப்ப, நம்ம பாலு வீட்டுக்கு அறு நூறு ரூபாய்க்கு ஆள் வந்தாச்சு.'
'அப்படியா'
' ஆள் வந்தாச்சா?'
' அறுநூறு ரூபாயா?'
' அச்சச்சோ ...அப்ப நமக்கும் நூறு ரூபாய் ஏத்திடுவாரே, செட்டியார்'
' யாரு வராங்களாம்?'
ஏக குரலில் கேட்டனர் ரகுவும், நாணாவும்.
' யாரோ லேடியாம்..'
' ஆஃபீஸ் கோயரா?'
' அவங்க ஆஃபீஸ் போக மாட்டாங்க. ஆனா, ஆஃபீஸ் அவங்களைத் தேடி வரும்' -நக்கலாகச் சொன்னான், கோண்டு.
' சமூக சேவகியா?'
' ஊஹும்..'
' அரசியல் வாதியா?'
' ஊஹூம்..'
' யாராக இருந்தால் என்ன? நம்ம ஸ்டோர் மொத்தத்தில நாறப் போறது..'
' கொஞ்ச நேரம் மண்டையை போட்டு உடைத்துக் கொண்டார்கள். வாலிபால் ஆட்ட
விறுவிறுப்பில் அது மறந்து போயிற்று.


ஒரு திங்கட்கிழமை, தெருவையே அடைத்துக் கொண்டு லாரி ஒன்று வந்து, அதிலிருந்து கண்டா, முண்டா சாமான்கள் இறங்கும் போது தான், பாலகிருஷ்ணன் வீடு பூட்டிக் கிடக்கும் விஷயமும், அந்த வீட்டிற்கு யார் குடி வரப் போகிறார்கள் என்கிற சுவாரஸ்யமும், மறுபடியும் வந்து ஒட்டி கொண்டது, அங்குள்ளவர்களுக்கு!
' யார் அவள்?'
' என்ன வயசு இருக்கும்?'
' பார்க்க எப்படி இருப்பாள்?'
ஆனால், வந்தது என்னவோ கட்டை, குட்டையாய் முண்டாசு கட்டிக் கொண்டு, இரண்டு,மூன்று ஆட்கள்!
பொறுப்பாக எல்லா சாமான்களையும் வீட்டினுள் எடுத்து வைத்து, பார்க்கும் எல்லார்
முகங்களிலும், அறைகிறார்போல், வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்ற விதம், யார் அந்த வீட்டிற்கு வரப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தான் தூண்டி விட்டது.
' ரொம்ப வசதி பட்டவா போல இருக்கு' - இது பார்வதி மாமி.
' வசதிப் பட்டவான்னா, ஸ்டோருக்கு எதுக்கு வரணும்? தனி வீடு பார்த்துக்க வேண்டியது தானே..' - பேபி.
' என்னமோடிம்மா..தெரியாம சொல்லிட்டேன்' - பார்வதி மாமி சட்டென்று ஜகா வாங்கவும், ஒரு புதுச் சண்டையை எதிர்பார்த்து ஆவலோடு காத்துக் கொண்டிருந்த அத்தனை பேர் முகங்களிலும் 'பேஸ்து' வழிந்தது!
சாமான்கள் வந்து இறங்கி, கரெக்டாக பத்தாவது நாள், இரவு ஒன்பது மணிக்கு பால கிருஷ்ணன் வீட்டு 'லைட்' எரிந்தது.
காலையில் வீட்டைப் பார்த்தால் பெரிய பூட்டு!
ஒரு வாரமாகவே இப்படித்தான். இரவு ஒன்பது மணிக்கு வீடு திறக்கும். பன்னிரெண்டு மணி வரை லைட் எரிதல். காலையில் பூட்டிக் கிடக்கும். வீட்டில் யார்..யார்..இருக்கிறார்கள் ..எப்போது வருகிறார்கள்..எப்போது போகிறார்கள்..என்று ஒன்றும் புரியாத நிலை!
அப்புறம் ஒரு மாதம் பூட்டியே கிடந்தது.
பொதுவான லைட் ஒன்றிற்கு எலெக்ட்ரிக் சார்ஜ், தெரு கூட்டும் பெண்ணிற்கு மாசச் சம்பளம் போன்ற சில செலவுகளை 'காமனாக' செய்வார்கள். பாலகிருஷ்ணன் வீட்டைச் சேர்த்துக் கொள்வதா, வேண்டாமா என்கிற குழப்பம். யாராவது வீட்டில் இருந்தால் தானே... யாரிடம் போய் வசூல் செய்வதாம்?
வாடகை வாங்க வரும் செட்டியாரிடம், கேட்டுப் பார்த்தால், ' அதெல்லாம் நீங்களே சேர்த்துப் போட்டுக்குங்க..அவங்க கிட்ட யாரும், எதுவும் கேட்கக் கூடாது' என்று ஒரே போடாகப் போட்டார்.
செட்டியாரைப் பற்றி இங்கு ஒன்று சொல்ல வேண்டும். நாம் சொல்லும் குறைகளை பொறுமையாகக் கேட்பார். பிறகு 'இஷ்டம் இருந்தா இருங்க..இல்லாட்டி வீட்டைக் காலி பண்ணிடுங்க...ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வர எனக்கு ஆள் காத்துக்கிட்டு இருக்காங்க..யாரும் ரொம்ப கஷ்டப் பட்டு இங்கு இருக்க வேண்டாம்'னு கூலாக சொல்வார்.
அப்படிப் பட்ட செட்டியாரையே 'இம்ப்ரஸ்' பண்ற ஆள் யாராக இருக்கும்?
அங்குள்ளவர்களுக்கு ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.
குசுகுசுவென்று ஆண்கள் எல்லாரும் பேசிக் கொண்டார்கள். அவர்கள் ஆர்வம் அப்படியே பெண்களுக்கும் தொற்றியது.ஒரு வழியாய் சஸ்பென்ஸ் தீர்ந்தவுடன் 'அடச்சீ' என்றாகி விட்டது, எல்லாருக்கும்.
' வர வர செட்டியாருக்கு புத்தி பொடனியை விட்டு கீழே போயிடுத்துப் போல இருக்கு. நாலு பேர் கௌரவமாய் வாழற இடத்தில 'இவளை' குடி வைக்க எப்படி இவருக்கு மனசு வந்தது.... வாடகை வாங்க செட்டியார் வரட்டும்..நான் இதைக் கேட்காம விட மாட்டேன்..'
கோடி வீட்டுக் கோனார் குதிகுதியென்று குதித்தார்.
' நம்ம கிட்ட ஒத்துமை இல்ல..ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் அவர்ட்ட கோள் சொல்றோம். அவருக்கு அது சாதகமாப் போயிடுத்து. நம்ம கிட்ட ஒத்துமை இருந்தா, அவர் இப்படி செய்வாரா?'
ஆதங்கத்துடன் சொன்னார், அனந்து.
அனந்து சொல்வதிலும் நியாயம் இருக்கத் தான் செய்தது. நன்றுடையான் கோவிலில், விடிய விடிய மதுரை சோமு கச்சேரி கேட்டு விட்டு, விடிகாலை மூன்று மணி வாக்கில் சுவரேறி குதித்து, வீட்டிற்கு வந்ததை யாரோ செட்டியாரிடம் போட்டுக் கொடுத்து விட்ட வருத்தம் அவருக்கு!
எல்லாரும் கூடி ஒரு தீர்மானம் போட்டார்கள்.
யாரும் பாலகிருஷ்ணன் வீட்டில் பேசக் கூடாது. முக்கியமாக பேபி காஃபிப் பொடி கடன் கேட்டு அந்த வீட்டு வாசல் படி மிதிக்கக் கூடாது. செட்டியார் வேண்டுமானால் ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி!
' ஈஷிக் கொள்ளட்டும் ஈஷி! '
நாணி கோணிக்கொண்டு நாணா செட்டியார் மாதிரி 'மிமிக்ரி' பண்ணியது அனவரும் ரசிக்கும் படியாய் இருந்தது.
அந்த 'அவள்' ..அது தான் அந்த பாலகிருஷ்ணன் வீட்டில் குடி வந்தவளுக்கு யாரைப் பற்றியும்..எதைப் பற்றியும் கவலையில்லை. அவள் உண்டு..அவள் 'வேலை' உண்டு.. என்று இருந்தாள். எல்லாரும் சேர்ந்து உதாசீனப் படுத்தியதை, அவள் உதாசீனப் படுத்தியது அவர்கள் எல்லாருக்கும் மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது! எங்கிருந்தோ ஒருவன் வந்து அவள் வீட்டிற்கு பால் ஊற்றினான். கீரைக் காரி..பூக்காரி என்று அவள் வீட்டிற்கு மட்டும் புதிது,புதிதாய் ஆட்கள்!
' முறையில் வந்து தண்ணி பிடிக்கணும்கிற அவசியம் அவங்களுக்கு இல்ல..அவங்க எப்ப வந்தாலும், நீங்க தண்ணிக்கு விடணும்' என்று செட்டியார் ஆர்டர் போட்டு விட்டார். கரெக்டாக ஏழு இருபதுக்கு வேலைக்காரி வந்து இரண்டு குடம் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அத்துடன் சரி..
பொச பொசவென்று வந்தது அத்தனை பேருக்கும். 'அவளுக்கு இருக்கிற ராங்கியப் பாரேன்' என்று ஆளாளுக்குப் பொருமினார்கள்.
செட்டியார் கூட அவளோட ' கஸ்டமரோ' என்று சந்தேகப் படவும் ஆரம்பித்தார்கள்.
அந்த ஸ்டோருக்கு அந்த 'அவள்' வருகையினால் வந்த நன்மை யாதெனில், அவரவர் தம்தம் வேற்றுமைகளை மறந்து ஒரு பொது எதிரியை ஒழித்துக் கட்ட ஒன்று கூடி நின்றது தான்!
எவ்வளவு நாள் அவளால் இங்கு தாக்கு பிடிக்க முடியும் என்று நினைத்தது போக, நாம இங்கு எவ்வளவு நாள் தாக்கு பிடிப்போம் என்று அவளுடைய அலட்சியம் ஒவ்வொருவரையும் நினைக்க வைத்தது. போதும் போதாததிற்கு செட்டியார் வீட்டை அவளிடம் விற்று விட்டார் என்று கூட ஒரு வதந்தி கிளம்பியது!
ஸ்டோரை விட்டு ' வாலி பால்' ஆட்டம் போயே போய் விட்டது. அவரவர் வீட்டு ஆண்களை, பெண்கள் பொத்தி,பொத்தி காத்து வந்தார்கள். ஆண்களோ, குடியரசு தின அணி வகுப்பின் போது, ஜவான்கள் வலது புறமாக சடாரென்று தலையை சாய்த்துக் கொண்டு 'பேரேடு' செய்வார்களே, அது போல ஆஃபீசுக்குப் போகும்போதும்.சரி...ஆஃபீஸ் விட்டு வரும்போதும்..சரி..அவள் வீடு இருந்த பக்கம் அனிச்சையாய் தலையை சாய்த்துக் கொண்டு, ஆஃபீஸ் நோக்கியோ...தம்தம் வீடு நோக்கியோ... சென்று கொண்டிருந்தார்கள்!
ஸ்டோரே கனத்துக் கிடந்தது!
தண்ணிச் சண்டை...பால் காரன் சத்தம்...காய்கறிகாரியுடன் பேரம்..'லஸ்மீ..கிஸ்ண மூர்த்தி..ப்போஸ்ட்ட்' என்ற போஸ்ட்மேன் கூவல்...'குருவை வணங்கக் கூசி நின்றேனோ..கொண்டவர் பாவத்தை சுமக்க மறந்தேனோ..பட்சியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ..' என்று வள்ளலார் போல பளிச்சென்று வெள்ளை உடை உடுத்தி, காலை சாய்த்துக் கொண்டு வருபவர்..
போச்சு!!
நேஷனல் ஹைஸ்கூல் க்ரவுண்டில் கீரன் கதை, தூப்புல் காலட்சேபம்..கும்பகோணம் சங்கர் பஜனை...ராதா கல்யாணம்..சீதா கல்யாணம்...பாகவத சம்மேளனம்...ஆச்சார்யரின் பட்டினப் ப்ரவேசம்..
எல்லாமே போச்சு!
இப்ப அந்த இடத்தில லேடீஸ் காலேஜ் கட்டப் போறாங்களாம்!
வடக்கு ஆண்டார் வீதியே தன் சுயத்தை இழந்து கொஞ்சம்,கொஞ்சமாய் மாறிக் கொண்டு வர, மாற விருப்பம் இல்லாதவர்கள், திசைக்கு ஒருவராய் பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
ஒரு கால கட்டத்தில், இந்த இடத்துக்கு இவள் தான் சாஸ்வதம் என்று எல்லாராலும் பேசப் பட்ட அந்த 'அவள்' கூட வீட்டைக் காலி செய்து கொண்டு போய் விட்டாள்!


மும்பை சென்ற பாலகிருஷ்ணன் அங்கேயே 'ரிடையர்டா'கி விட்டான். பையனுக்கும் அங்கேயே வேலை கிடைத்து விட்டது. வேலை.வெட்டி எதுவும் அவனுக்கு இல்லாததினால், மனசு பழைய நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும். ஸ்டோர் ஞாபகம் வந்து விடும், அடிக்கடி!
ஹாலில் மாட்டியிருக்கிறானே, இந்த பழைய 'வால் க்ளாக்' . இது இவனிடம் வந்ததே ஒரு தனிக் கதை!
ஒரு நாள் பக்கத்து வீட்டு மாலுக்குட்டி காணாமல் போய் விட்டாள். ஏக அமர்க்களம்..ஸ்டோரே அல்லோல..கல்லோலப் பட்டது. இரண்டு மணி நேர அலக்கழித்தலுக்குப் பிறகு, குழந்தை கிடைத்தவுடன் எல்லார் முகங்களிலும் நிம்மதி!
அடுத்த நாள் குழந்தை சொன்னாள்.
" இதோ பாருங்கோ,எல்லாரும்..நா இனிமே காணாமப் போக மாட்டேன்.."
" எப்படிடா, கண்ணு"
முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு, 'நர்ஸரி ரைம்' போல் பாட ஆரம்பித்தாள்.
எம் பேரு மாலு..
எங்கப்பா பேரு பாலு..
முப்பத்தெட்டு பை மூணு..
மூக்கப் பிள்ள லேனு..
மணிவாசகம் ஸ்டோரு..
வடக்கு ஆண்டார் வீதி..
தெப்பக் குளம் போஸ்ட்டு..
திருச்சி ரெண்டு ....
" பாட்டு ஜோரா இருக்கே..யார் சொல்லித் தந்தா?"
" தோ...பால கிருஷ்ணன் அங்க்கிள். அப்பா
நான் இனிமே காணாமப் போயிட்டா, நீங்க யாரும் கவலைப் படாதீங்க..இந்த பாட்டை பாடினாப் போறும்..போலீஸ் மாமா இங்கு என்னை கொண்டு வந்து சேர்த்திடுவார்.."
குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்டான், அந்த பால கணேசன். மாலுக் குட்டியின் அப்பா!
இவன் ஸ்டோரைக் காலி செய்யும் போது அந்த பால கணேசன் ஒரு 'வால் க்ளாக்' ப்ரஸண்ட் பண்ணினான்.
அது தான் இது!
" ஹாலின் 'ரிச்னஸ்' க்கு இது திருஷ்டிப் பூசணிக்காய்' என்று மருமகள் சொன்னாலும், 'இது இங்க தான் இருக்கணும்'ங்கிற பால கிருஷ்ணனின் பிடிவாதமே வென்றது!
இங்கேயும் தான் மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் கிடையாது..அடுத்தவர் உதவியும் தேவை இல்லை...முகத்தை எப்போது பார்த்தாலும் இறுக்கமாக வைத்துக் கொண்டு...இயந்திர மனிதர்கள் !
ஃப்ளாட்டில் பக்கத்து வீட்டுக் காரர் பெயர் கூடத் தெரியாமல்..பத்து வருடங்களாக என்ன ஒரு ஜீவனே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்!
பழையபடி, திருச்சிக்கே போய், அந்த ஸ்டோரிலேயே, 'செட்டில்' ஆகி விடலாமா என்று ஒரு நப்பாசை..
அந்த சமயம் பார்த்து, திருச்சியில் ஒரு கல்யாணம் வர, அப்பா, பிள்ளை இருவரும் கிளம்பி விட்டார்கள்.
பிரயாணத்தின் போது பையன் கேட்டான்:
' அப்பா..ஸ்டோர்ல உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இருப்பாங்களா?'
' தெரியாதுப்பா..அப்பவே அனந்து பின்னவாசல் பக்கம் போயிடப் போறதா சொன்னார். கோனார் காலமாயிட்டார்னு தெரியும். பார்வதி மாமி இருக்க சான்ஸே இல்ல..நாணா, கோண்டு, பாச்சா, பேபி யாராவது இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம். ஆனா, அந்த ஸ்டோர் அங்க நிச்சயமா இருக்கும்'
கல்யாணம் முடிந்தவுடன், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஆண்டார் வீதி வந்தார்கள், இருவரும்.
என்ன ஒரு ஏமாற்றம்!
அவன் குடி இருந்த இடத்தில் ப்ரம்மாண்டமாய் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பு!
அவனுக்காக அந்த ஸ்டோர் இன்னமும் காத்துக் கொண்டு இருக்கவில்லை. அந்த இடம்..சக மனிதர்களுடன் அவன் வாழ்ந்த அந்த இனிமையான நிகழ்வுகள்.. . ஒரு .ஒற்றை ரூபாய் நாணயம் உருண்டோடிப் போவது போல், போயே போய் விட்டது !