Wednesday, January 23, 2013

எனக்கு வந்த வக்கீல் நோட்டீஸ் !


          எனக்கு இன்று காலை ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்தது. படித்துப்
 பார்த்து  விட்டு மயங்கி  விழுந்தவன் தான் !
          ஆறு மணி நேரம் கழித்து முழிப்பு வந்தது...மறுபடியும் அந்த வக்கீல் நோட்டீஸ்
ஞாபகம் வர மறுபடி மயக்கம் ...இப்படியாகத் தானே ஒரு நாளில்  இருபத்தி  ஐந்து மணி நேரம் கிட்ட தட்ட 'கோமா' ஸ்டேஜில் கிடந்தேன் !
     
அப்படி என்ன இருந்தது அதில் !     

 என்னை அலைக் கழித்த அந்த வக்கீல் நோட்டீஸ் இது தான் ...
  
".........எங்கள் கட்சிக் காரர் திரு அருமை ராஜன் சாரி எருமை ராஜன்  தலைவர் எருமைகள் சங்கம்  777, எருமை ராஜன் நகர், எருது நகர் பின் கோட்  7777777
என்ற விலாசத்தில் வசிக்கும் அன்னார் சார்பாக நான் அறிவிப்பது என்னவென்றால் தாங்கள் தங்கள் வலைப்பூவில் அவரது இனமான
எருமைகளைப் பற்றி மிகமிகக் கேவலமாக அதுவும் மனிதர்களுடன் சம்பந்தப் படுத்தி எழுதி உள்ளீர்கள் .
இதனால் எங்கள் கட்சிக் காரர் மனவருத்தம் அடைந்து அதே மனக்
கிலேசத்துடன் NATIONAL HIGHWAYS ஐ கடக்கும்  போது, மனிதர்கள் ஓட்டி வந்த MATADOR VAN
 ஒன்று இடித்து மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு MENTAL DEPRESSION வருவதற்கும் காரணமாக உங்கள் எழுத்து உள்ளது .
    இந்த அசெளகர்யங்களினால்  ஏன் உங்கள் மீது  எ.பி.கோ. செக்ஷன் 707
பிரகாரம் மான நஷ்ட ஈடு வழக்கு போடக்கூடாது என்பதற்கும் , தங்களால்
என் கட்சிக் காரருக்கு ஏற்பட்ட மன  உளைச்சலுக்கு ஏன் ஏழு மிலியன் டாலர்
அபராதம் விதிக்க கூடாது என்பதற்கும் இந்த அறிவிப்பு கண்ட எழுபத்திஏழு நாட்களுக்குள்
பதில் தருமாறு எங்கள் கட்சிக் காரர் சார்பாக கோரப் படுகிறது. அப்படி தங்களிடமிருந்து பதில் வராத பட்சத்தில் இந்த அறிவிப்பையே சம்மதமாக
எடுத்துக் கொண்டு தங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் படும் என்று
இதன் மூலம் கடுமையாக எச்சரிக்கை செய்யப் படுகிறது .

                                                                                                      இவண் ,
                                                        எங்கள் கட்சிக் காரர் எருமை ராஜன் சார்பாக ,

                                                                       எம தர்ம ராஜன் எம்.ஏ .பி. எல்    ....  "

     எப்பொழுது  எருமை மாடு பற்றி   'கன்னா பின்னா' என்று  எழுதினேன்என்று
எனக்கும் தெரியவில்லை ..மேலும்
எருமை மாடு என்பது எனக்கு மிகவும் பிடித்த மிருகம். நான் மட்டும்  பெரிய  தலைவராய் இருந்திருந்தால்  எருமை மாட்டையே தேசிய
விலங்காக
அறிவித்து விடும் அளவிற்கு ஆசை உள்ளவன்.எருமை மாடுகள் மீது இத்தனை
பிரியமாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து இப்படியா எழுதுவது ?
      அது தான் என் வருத்தமே !
      இப்போது நான் என்ன செய்வது ?
      இந்த இக்கட்டினை எப்படி சமாளிப்பது?
      ஏதாவது பதில் எழுத வேண்டுமே...
      இல்லாவிட்டால் ஏழு மிலியன் டாலராமே ...
      ஆயிரம் ரூபாய் நோட்டை பார்த்தே நூறு நாளுக்கு மேல் ஆகி விட்டது !
      யாராவது வக்கீல் நண்பர்கள் இருந்தால் சொல்லுங்களேன்...ப்ளீஸ்..

பின்  குறிப்பு :
     
     1. வக்கீல் FEES கொடுக்க என்னிடம் காசு கிடையாது !
     2. ஒரு கட்டு வைக்கோல் வேண்டுமானால் தருகிறேன் !!

கடைசியாக வந்த  தகவல் 
     
                   
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் ஒரு ரிஜிஸ்டர்ட் போஸ்ட் !
பயந்து கொண்டே கையெழுத்துப் போட்டேன் ..பிரித்துப் பார்த்தால் அந்த
வக்கீல் நோட்டீஸ் வேறொரு  வலைத்தள சொந்தக் காரருக்காம் !
தவறிப் போய் எனக்கு அனுப்பி விட் டார்களாம்.!
     நல்ல வேளை ..தலைக்கு வந்தது, கொம்போடு போயிற்று ! 
              

Monday, January 7, 2013

எனக்கிணையாக தர்பாரில் ...........(முடிவு)

(இதன் முதல் பகுதி 24.12.12 ல் வெளி வந்தது..படிக்கவும் )
       



       அது ஒரு அக்ரஹாரம் ....
       அந்த அக்ரஹாரத்தின்   கிழக்கில் சிவன் கோவில் ..சிவனே என்று இருப்பவர் அவர் .. ஒரு .ஈ ..காக்காய் அவரை அண்டாது !
      அந்த மருதாந்த நாத ஈசனுக்கு துணையாக சுந்தர காஞ்சனையும் ...
இருவருக்கும் துணையாய் குருக்கள் விசுவும் ......
       மேற்கில் பெருமாள் கோவில்.......
       ராதா கல்யாணம் ..சீதா கல்யாணம் என்று எப்போதும் பிசியாக
இருக்கும் இடம் ....
       பஜனை ...உறியடி ... என்று எப்போதும் கொண்டாட்டம் தான் !
      கொல்லைப் புறத்தில் ஹனுமத் நதி ஓடிக் கொண்டிருக்க .....
      அங்கே ஒரு கும்பல் சங்கீத சாதஹம் பண்ணிக் கொண்டிருக்கும் ...
      குளித்து விட்டு சந்தியாவந்தனம் செய்து கொண்டிருப்பார்கள் சிலர்..
      அக்ரஹாரத்தின் வாசலில் பஸ் சர்வீஸ்!
       கொல்லைப் புறத்தில் படகு சர்வீஸ் !!
      மேற்கே   மூன்றாவது வீடு ....
     கோதண்ட ராமஸ்வாமி கோவிலை ஒட்டி .....
       எப்போது பார்த்தாலும்  சுநாதமாய் சங்கீதம் கேட்டுக் கொண்டிருக்கும் வீடு  .....ஒரு பத்து, பதினைந்து மாணவர்கள்  ப்ளூட் ....வயலின் என்று அப்பியாசம் செய்து கொண்டே இருப்பார்கள் ....சிலர் சிரத்தை எடுத்துக் கொண்டு பாடுவார்கள் ..சிலர் வெகு அனாயாசமாய் பாடுவார்கள் ..
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக   வந்து போய்க் கொண்டு இருந்தவர்களும் அங்கு உண்டு....
       ஒரு நாள் ....
        திருவிடைமருதூரிலிருந்து ஒருவர் அந்த வீட்டிற்கு வந்தார்...கூடவே
ஒரு சிறுவன் ...
        " ....மாமா இந்த பையன் என்னோட அக்கா பையன் .....இந்த பையனோட
தோப்பனார் சமீபத்தில காலம் ஆயிட்டார் ...பையனை பள்ளிக்கூடம்  அனுப்ப தோதுப் படலை ..  எனக்கும்  பெரிய சம்சாரம் ..அதனால நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ........."
       " அதனாலென்ன பேஷா விட்டுட்டு போங்கோ....பத்தோட பதினொண்ணா
அவன் இங்க இருக்கட்டும் ..."
      'பத்தோடு  பதினொன்று' இவன் இல்லை என்பது வந்த கொஞ்ச நாட்களிலேயே  அந்த வித்வானுக்குத் தெரிந்து விட்டது. சரளி,
ஜண்டை,  வரிசைகள் முடிந்து அலங்காரம்  வரை வந்து விட்டான் பத்து பதினைந்து
நாட்களிலேயே.
      கற்பூர புத்தி உள்ள மாணாக்கனைக் கண்டால் எந்த குருவிற்குத் தான்
பிடிக்காமல் இருக்காது? 
      தனக்குத் தெரிந்த அத்தனை விஷயங்களையும் வஞ்சனை இல்லாமல்
சொல்லிக் கொடுத்தார் குரு. அத்தனையையுமே சிக்கெனப் பிடித்துக் கொண்டான் தண்டபாணி ! ப்ளூட்
வாசிப்பில் கஷ்டமான 'கமகம்' அவனுக்கு வெகு சுலபமாக வந்து விட்டது!
எந்த இடத்தில் கமகம் போட்டால் பரிமளிக்கும் என்பதும் புரிந்து விட்டது .
     ஆனால் குறையே இல்லாத மனிதன் யார்?   அவனிடம் உள்ள பெரிய குறையே  அவனுடைய முரட்டுத் தனம் தான் !
சிறு வயதில் அன்புக்கு ஏங்கிய அந்த
பிஞ்சு  குழந்தை உள்ளம் அது கிடைக்காமல் போகவே
நாளாவட்டத்தில் முரட்டுத் தனமாக ஆகி விட்டது போலும்  !
சந்திரனின் களங்கம்
போல் .....ஒரு கருமையான நிழல் போல்........... அவனிடமே தங்கி விட்டது அந்த நீச குணம் !
      இல்லாவிட்டால் இப்படி ஒரு கொடூரமான காரியம் செய்யத் துணிவானா
அவன்?
      கிரிக்கெட் விளையாடும் போது, வேண்டுமென்றே பந்தை, கேசவன் தலையை குறி பார்த்து அடிக்க அதனால் அவன் மண்டை உடைந்து சரியாக மருத்துவம் செய்ய
முடியாததினால்
புத்தி பேதலித்து ... அவன் எங்கோ ஓடிப்  போய் விட.....
      இது எதற்காக?
       கேசவன் தலையை இவன் எதற்கு குறி வைக்க வேண்டும்?
       ரொம்ப சிம்ப்பிள் !
      கேசவன் அவனை விட நன்றாக ப்ளூட் வாசிப்பான்  !!
     அது பொறாமையாய் இவனுள் கொழுந்து விட்டெறிய .....
      விளையாட்டு போல பத்து, பதினைந்து வருடங்களாகி விட்டது !!
     எல்லாருமே தற்செயலாக நடந்தது இது என்று  நினைத்துக் கொண்டிரு
க்கிறார்கள் ...
.................

              *                    *                    *                       *                      *                   *
 " யாரது?"
 சாளேஸ்வரம் அவருக்கு .....
கண்களை குவித்துக் கொண்டு பார்த்தார்.
 " நான் தான் "
"வா கண்ணா வா ...ஒவ்வொரு நாளா நான் பார்த்துண்டே இருக்கேன் '
"உங்கள பார்க்காம என்னால மட்டும் இருக்க முடியுமா ? இந்தாங்கோ
ஸ்வீட் ...மாமிக்கு போன வருஷமே குளிர்னு நடுங்கிண்டு இருந்தாளே ..
ஸ்வெட்டர்  இந்தாங்கோ ..மாமா உங்களுக்கும் தான் !"
"தீர்க்காயுசா நீ இருக்கணும்பா .....சொந்த புள்ள இருந்தா கூட இப்படி
எங்கள கவனிக்க மாட்டான் ..கேசவன் இல்லாத குறையை நீ  போக்கிட்டே"             
"பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கோ.....எனக்கும் உங்கள
விட்டா  வேற யார் இருக்கா ..இந்த குளிர் காலத்துல நீங்க சிரமப் படுவேளே ன்னு தான் நான் ஓடி வரேன் ..இந்த மார்கழி மாசம் பூரா உங்களோட தான் ...."
"ஒவ்வொரு மார்கழியும் இப்படி வந்துடறியே ...உன் கச்சேரி எல்லாம்
என்ன ஆகிறது?"
"அதை விட சந்தோசம் எனக்கு இங்கே .....உங்களப் பார்க்கறதில தானே
கிடைக்கிறது "
       வெகு பிரியத்துடன் அந்த கிழவரின் கால்களை  வலி போக ஹிதமாகப்      பிடித்துக் கொண்டு  தண்டபாணி இருக்க ..அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் அந்த கிழவரின் பாதங்களை
நனைக்க .....  !
    ஆகவே, இனிமேல்  .............
     மார்கழி மாத கச்சேரிகளில் தண்டபாணியைத் தேடி யாரும்
போகாதீர்கள்     ... ...
தான் செய்த  பாவத்தை அவன்  கொஞ்சம்    கொஞ்சமாய் கழுவிக் கொண்டிருக்கிறான்
நீங்கள்  செய்ய வேண்டியதெல்லாம் அவனை அப்படியே விட்டு விட்டு வந்து விடுவது தான்  ....